மூதூர் சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள பௌத்த காலணியாக்குவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று காலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் மூதுார் 64 ம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடடிவக்கைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட, மலையைச் சூழவுள்ள கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அடங்கலாக பொதுமக்கள் ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக மூதுார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பேரணியொன்றை நடாத்தியிருந்தனர்.
இப்பேரணியில் பொது மக்கள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்றுக் காணி வேண்டாம், சொந்த நிலமே எமக்கு வேண்டும், காவல் துறையே அப்பாவி பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு துணை போகாதே, மூதுார் சிறுபான்மை மக்களின் காணிகளை அபகரிக்கும் சிங்கள பௌத்த காலனித்துவத்தை நிறுவுவதை நிறுத்து அதிகாரங்களையும் , அதிகாரிகளையும் வைத்து மக்களை விரட்டாதே, எங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்கு எங்களிடம் வாடகை கோராதே, மூதுார் முஸ்லிம் , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை நிறுத்துங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு மூதுார் பிரதேச செயலகம் வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் தங்களுடைய கோரிக்கைகளை பாதிக்கப்பட்ட மக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஒன்றை மதத்தலைவர்களுடன் இணைந்து பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்