கொரோனா முடக்கத்தின் காரணமாக தடைப்பட்ட பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் முதல்கட்டமாக எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வின்றேல் கடமைகளுக்குச் செல்லமாட்டோம் என கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கல்விசாரா ஊழியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பாடசாலைகளைத் திறப்பதற்கு முன்பதாக தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று(15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் தலைவர் அஜித் கே.திலகரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பதவி நிலைகளின் அடிப்படையிலான பாகுபாடு, வருடாந்த இடமாற்றம் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி, கல்விசாரா ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிபர், ஆசிரியர்கள் சங்கத்தினரும் தமது கோரிக்கைகளுக்கு தீர்வை வலியுறுத்தி புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.