பிரிட்டன் - செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி கன்சர்வேடிவ் எம்.பி. சோ் டேவிட் அமேஸ் (69) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ. பகுதியில் உள்ள பெல்பேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டபோது இவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திக் குத்தில் படுகாயமடைந்த டேவிட் அமேஸை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உடனடியாக சம்பவ இடத்துக்கு ஹெலிகப்டர் அம்புலன்ஸ் விரைந்தது.
எனினும் டேவிட் அமேஸின் உடல்நிலை மிக மோசமாக இருந்ததால், அவரை ஹெலிகப்டர் அம்புலன்ஸில் கொண்டு செல்லாமல் சம்பவ பகுதியில் வைத்தே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்டனர். மருத்துவர்களின் கடுமையாகப் போராடியபோதும் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, கொலையாளியான 25 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1983ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் எம்.பியாக இருக்கும் டேவிட் அமேஸ் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இத்தத் தாக்குதல் சம்பவம் ஒரு தீவிரவாத செயல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் மிகவும் கனிவான, அழகான, மென்மையான மனிதர்களில் ஒருவர் டேவிட் அமேஸ். நாங்கள் இன்று ஒரு நல்ல பொது ஊழியர் ,மிகவும் பிரியமான நண்பர் மற்றும் சக சேவகரை இழந்துவிட்டோம் என அவரது இழப்பு குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டேவிட் ஒரு சிறந்த மனிதர், சிறந்த நண்பர், மற்றும் சிறந்த எம்.பி., தனது ஜனநாயக கடமையை ஆற்றும்போது அவர் கொல்லப்பட்டுள்ளார் என பிரிட்டன் சுகாதாரத்துறை செயலாளர் சஜித் ஜாவேத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் நடந்த இடத்தில் செளத் எண்ட் கவுன்சிலர் ஜோன் லாம்ப் இருந்துள்ளார்.
எப்போதும் பிறருக்கு உதவக் கூடிய நிலையில் இருந்தார் டேவிட். குறிப்பாக, அகதிகளுக்காக உதவ எப்போதும் முயற்சி எடுத்து வந்தார். தான் நம்பும் ஒரு விடயத்தில் எப்போதும் உள்ளப்பிடிப்பு மிக்கவராகவும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதில் அதிக முனைப்பு காட்டுபவராகவும் விளங்கினார் டேவிட் என ஜோன் லேம்ப் தெரிவித்துள்ளார்.
தொகுதிவாசிகளை அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே நேரில் சென்று குறைகளை கேட்டறிவதை டேவிட் அமேஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், இப்படியொரு தாக்குதலில் அவர் பலியாவார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை எனவும் கவுன்சிலர் ஜோன் லாம்ப் தெரிவித்துள்ளார்.
டேவிட் அமேஸின் மறைவுக்கு கட்சி வித்தியாசமின்றி பிரிட்டனில் உள்ள அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து