ஆப்கானிஸ்தான் முழுமையாகத் தலிபான்களில் கட்டுப்பாட்டுக்குள் வந்து அங்கு போராட்டம் ஓய்ந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த ஆப்கானியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சேதமடைந்த தங்கள் வீடுகளைப் புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆப்கான் மக்களின் மீள்கட்டுமானப் பணிகளுக்காக ஐ.நா. உள்ளிட்ட அமைப்புக்களும் நேரடி உதவிகளை வழங்கி வருகின்றன.
காபூல், கந்தஹார், குண்டுஸ் மற்றும் பால்க் மாகாணங்களில் மொத்தம் 4,506 பேருக்கு வீடமைப்புக்கான அத்தியாவசிய உதவிப் பொருட்களை வழங்கியுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் (UNHCR) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக நீடித்த அமெரிக்காவின் இராணுவத் தலையீடு முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு வறுமை, வேலையின்மை போன்ற சிக்கல்கள் அதிகரித்துள்ளன. மத்திய வங்கி சொத்துகளில் பில்லியன் கணக்கானவை முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதிக்கான அணுகலை நிறுத்திவிட்டன.
வங்கிகளில் பணம் இல்லாததால் ஆப்கானிஸ்தானில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அத்துடன், உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நெருக்கடி குறைந்தது 18 மில்லியன் மக்களை பாதிக்கிறது. அதாவது பாதிக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வளர்ந்துவரும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு மக்களை கடுமையாகப் பாதிக்கும் என எச்சரித்துள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், அங்கு பொருளாதார நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளை சர்வதேச சமூகம் கண்டறிய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.