பிரிட்டன் - செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி கன்சர்வேடிவ் எம்.பி. சோ் டேவிட் அமேஸை கத்தியால் குத்தி படுகொலை செய்த நபர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினரைக் குத்திக் கொன்றதாகக் கைது செய்யப்பட்ட நபர் சோமாலிய வம்சாவளியைச் சேர்ந்த 25 வயதான அலி ஹர்பி அலி என்று பிரிட்டன் அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கொலையாளி லண்டன் நகர பொலிஸாரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை இடமாதம் 22 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த தாக்குதலில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரிட்டன் - செளத் எண்ட் வெஸ்ட் தொகுதி கன்சர்வேடிவ் எம்.பி. சோ் டேவிட் அமேஸ் (69) பிரிட்டன் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் லீ-ஆன்-சீ. பகுதியில் உள்ள பெல்பேர்ஸ் தேவாலயத்தில் தமது தொகுதிவாசிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டபோது குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதேவேளை, அகதிகளுக்காக குரல் கொடுத்து வந்த சோ் டேவிட் அமேஸ்,
தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் உறுப்பினரானவும் செயற்பட்டு வந்தார்.
விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தால் நடத்தப்படும் நிகழ்வுகளில் அமேஸ் அடிக்கடி கலந்து கொள்வார். மேலும் இலங்கையில் நடக்கும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அவர் அடிக்கடி குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் சோ் டேவிட் அமேஸ் மறைவுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இரங்கல் வெளியிட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து