யாழ் கேரதீவில் திட்டமிட்டு சாவகச்சேரி பிரதேச சபை சுற்றாடல் பாதிப்பினை ஏற்படுத்துவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சுமார் 150 அடி நீளத்தில் புதிதாக கழிவு முகாமைத்துவத்துக்கான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ள போதிலும், அப்பகுதியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் பிரதேச சபை அக்கறை செலுத்தவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாதுகாப்பு அமைவிடத்தின் பிரதான வாயில் பூட்டப்பட்டுள்ள நிலையில், அதை அண்மித்த பகுதியில் திண்ம கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன.
குறித்த கழிவுகளை கால்நடைகள் உணவாக உட்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலை தொடர்ந்தால் கால்நடைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டிய அபாய நிலை ஏற்பட்டிருப்பதாக மக்களால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் யாழ் வீதியின் அருகில் காணப்படும் நிலையில் அப்பகுதி துர்நாற்றம் வீசி வருகின்றது.
இதேவேளை, உக்கும் உக்காத பொருட்கள் என தரம் பிரிக்கப்படாது ஒரே இடத்தில் கொட்டப்படுவதுடன், தீ மூட்டப்பட்டு சுற்று சூழவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றனர்.
நவீன உலகில் மீள்சுழற்சி, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் ஊடாக சுற்றாடலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சமூகத்தினைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு பிரதேச சபையே இவ்வாறு நடந்துகொள்வது எந்தவகையில் நியாயம் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்