அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்கள் கட்டாய கொவிட் தடுப்பூசி கொள்கைத் திட்டத்தை அமுல் செய்யத் தொடங்கும் நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஆயிரக்கக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாததன் காரணமாக வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம் திங்களன்று அதன் தலைமை கால்பந்து பயிற்சியாளரையும் அவரது உதவியாளர்களையும் பணியில் இருந்து நீக்கியது. மத நம்பிக்கையின் அடிப்படையில் கட்டாய தடுப்பூசி ஆணையில் இருந்து விலக்க கோரி பயிற்சியாளர் நிக் ரோலோவிச் விண்ணப்பித்திருந்தபோதும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
சிகாகோ மற்றும் பால்டிமோர் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டமைக்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால் எதிர்வரும் நாட்களில் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அமெரிக்காவில் 7 இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் இறப்புக்குக் காரணமாக கொவிட் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றத் தயங்கிய பலர் கட்டாய தடுப்பூசி கொள்கைத் திட்டத்தால் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி பெறத் தகுதியான அமெரிக்கர்களில் 77% பேர் இதுவரை குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை கொவிட் பதிலளிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
சிகாகோவில் கட்டாய தடுப்பூசித் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் தரப்பினருக்கும் நகர முதல்வர் லோரி லைட்ஃபூட்டுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
கிகாகோ நகரத்தில் கடமையாற்றும் 12,770 பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றுகளை இதுவரை சமர்ப்பிக்கவி்லை. இதனால் அவா்கள் சம்பளம் இல்லா விடுப்பில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பாதிப்பைக் குறைப்பதுடன், இறப்புக்களையும் தடுப்பதில் கொவிட் 19 தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாகத் தெரிவித்து வெள்ளை மாளிகை கட்டாய தடுப்பூசி கொள்கைத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே இதனை ஏற்றுக்கொள்ளாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, கட்டாயத் தடுப்பூசித் திட்டத்தை எதிர்த்து ஆங்காங்கு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.