100 கோடி பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி செலுத்தி தொற்று நோய்க்கு எதிரான போரில் இந்தியா இன்று புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த ஜனவரி -16 தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 278 நாட்களில் 100 கோடிக்கும் அதிக தடுப்பூசிகளை நிர்வகித்த சாதனையை இந்தியா இன்று காலை பதிவு செய்தது.
இந்தியாவில் தடுப்பூசி பெறத் தகுதியான சுமார் 30% பேருக்கு (291 மில்லியன்) முழுமையாக இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அத்துடன், 707 மில்லியன் மக்கள் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை, உலகில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட கொவிட் தடுப்பூசிகளை நிர்வகித்த இரண்டாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் இந்த மைல்கல்லை சீனா எட்டியது.
இந்நிலையில் தொற்று நோய்க்கு எதிரான இந்த போரில் அயராது பாடுபட்டு உழைத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதாரத்துறையினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இறுதிக்கும் 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தபோதும் அதற்கு முன்பதாகவே 9 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் திகதி தொடங்கியது. முதலில் 60வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அதன்பிறகு 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் என தடுப்பசி போடப்பட்டு வந்தது. ஆரம்ப கட்டத்தில் மெதுவாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி செலுத்தும் பணி பின்னர் வேகமடுத்தது.
இந்திய மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 102 கோடியே 48 இலட்சத்து 12 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. இவற்றில் பயன்படுத்தியது போக தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 10 கோடியே 78 இலட்சத்து 72 ஆயிரத்து 110 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 3,41,27,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,52,811 பேர் பலியாகி உள்ளனர். அதேவேளை, இதுவரை 3,34,95,808 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 1,78,831 பேர் கொரோனாவுடன் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.