துனிசியாவில் பொது மற்றும் தனியார் துறையில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறையை அமுல் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
துனிசியர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கும் இந்த கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை பொருந்தும் என அந்நாட்டு ஜனாதிபதி நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அரச அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பயனர்கள் பொது மற்றும் தனியார் நிர்வாகங்களில் பணியாற்றவும் சேவை பெறவும் முழுமையாகக் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டமைக்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், கபேக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கும் நுழைவதற்கும் தடுப்பூசி பாஸ் அவசியமாகும்.
முழுமையாகத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளதாக பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள். அல்லது கட்டாய விடுமறையில் அனுப்பப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தடுப்பூசி பெற்றுக் கொண்டதை நாட்டுக்குள் வரும் வெளிநாட்டினர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 11.6 மில்லியன் துனிசியர்களில் 4.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதுவரை இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளதாக துனிசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக துனிசியாவில் கடந்த ஒரு வருடமாக இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தது. தொற்று நோய் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதமே இந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)