அமெரிக்காவில் டெக்சஸ் மாகாணம் - ஹூஸ்டன் நகரில் அந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆஸ்ட்ரோவோர்ல்ட் இசைக் கச்சேரியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர்.
சுமார் 50,000 பேர் பங்கேற்ற இசைக்கச்சேரி நடந்துகொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் அதிகளவானவர்கள் மேடையை நோக்கி நகரத் தொடங்கியதாக ஹூஸ்டன் தீயணைப்புத் துறைத் தலைவர் சாமுவேல் பெனா இன்று சனிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்ததாகவும் அவா் கூறினார்.
உயிரிழந்த 8 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகும் வரை மரணத்துக்கான காரணத்தை உறுதிசெய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் குறித்து வீடியோக்களை வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்ட நெரிசலில் சிக்கிய 17 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் 11 பேர் மாரடைப்பு நிலையில் இருந்தனர் எனவும் ஹூஸ்டன் தீயணைப்புத் துறைத் தலைவர் சாமுவேல் பெனா தெரிவித்தார்.