செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்ணூர்தியை செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் திகதி அனுப்பி வைத்தது. கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் பெர்சவரன்ஸ் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளையும் இந்த விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.
இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர் நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.
ஏற்கெனவே ‘பெர்சவரன்ஸ்’ மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் பல புகைப்படங்களை நாசா வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது, முன்பு எப்போதும் கண்டிராத புதிய படங்களை பெர்சவரன்ஸ் ரோவர் நாசாவிற்கு அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பாறைகளுக்கு இடையே உள்ள பள்ளமும் இதன்மூலம் முதல் முறையாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.