தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் மிகப்பெரிய சிறையாக கருதப்படுகிற குயாகுயில் நகர சிறையில் கைதிகள் இரண்டு குழுக்களாக மோதிக்கொண்டதில் 68 பேர் பலியாகினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரு கும்பல்களுக்கு இடையில் வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளை வீசியும் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. 8 மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த மோதலில் இரு குழுக்களையும் சோ்ந்த குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டதாக ஈக்வடார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் இருந்த ஒரு குழுவினர் மற்றொரு சிறைப்பிரிவுக்கு செல்வதற்காக முதலில் ஒரு சுவரை வெடிபொருள் கொண்டு தகர்க்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. தங்கள் போட்டி கும்பலை தீர்த்துக்கட்டுவதற்காக ஒரு கும்பல் மெத்தைகளை எரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதனையடுத்தே இரண்டு கைதிகள் குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் சிறைச்சாலை போர்க்களம் போல காட்சியளித்தது. பல மணி நேர போராட்டத்தின் பின்னரே பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த சிறை மோதல் குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அதில் பல கைதிகளின் உடல்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்படுகின்றன.
3 பிரிவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் மோதலில் ஈடுபடுவதை சம்பவ நேரத்தில் சிறைக்கு மேலே பறந்த ட்ரோன்கள் படம் பிடித்துள்ளதாக ஈக்வடார் பொலிஸ் உயர் அதிகாரி ஜெனரல் தன்யா வரேலா தெரிவித்தார்.
சிறைக்குள் விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் மற்றும் சில சமயங்களில் ட்ரோன்கள் மூலமாகவும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவா் கூறினார்.
மோதல் இடம்பெற்ற குயாகுயில் நகர சிறையில் சுமார் 8,000 -க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதே சிறையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெடித்த மோதலில் 119 பேர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.