ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ள நிலையில் இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயற்பாடு என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அத்துடன், விண்வெளியில் குப்பைகளை உருவாக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையைப் பயன்படுத்தி காஸ்மோஸ்-1408 என்ற தனது சொந்த செயற்கைக்கோளை வெடிக்கச் செய்து அழித்தது.
1982 இல் விண்ணுக்கு ரஷ்யாவால் ஏவப்பட்ட உளவு செயற்கைக்கோளான காஸ்மோஸ் -1408 தொன் எடையைக் கொண்டதாகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பே செயலிழந்திருந்தது.
சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 420 கி.மீ. உயரத்தில் சுற்றுகிறது. இதில் தற்போது நான்கு அமெரிக்கர்கள், ஒரு ஜேர்மனியர் மற்றும் இரண்டு ரஷ்யர்கள் என 07 பேர் உள்ளனர் .
இந்நிலையில் ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சேதனையால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன், இந்த நடவடிக்கை விண்வெளி சுற்றுப்பாதை குப்பைகளை உருவாக்கியுள்ளது. அவை இப்போது அனைத்து நாடுகளின் நலன்களையும் அச்சுறுத்துகின்றன என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளமை குறித்து நான் கோபமடைந்துள்ளேன் என நாசா நிர்வாகி பில் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரஷ்யா செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனையால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்படும் என்ற குற்றச்சாட்டை ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் மறுத்துள்ளது.