யாழ்ப்பாணம். காரைநகர் கோவளம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில், கடலில் மூழ்கி உயிரிழந்த தமிழக மீனவரின் சடலத்தை மீள் பிரேத பரிசோதனை செய்யுமாறு மேல் நீதிமன்றின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற்படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.
இவ்விபத்தில் படகிலிருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியிருந்த நிலையில் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றைய நபர் காணாமல் போயிருந்தார்.
நீரில் மூழ்கிக் காணாமல்போன தமிழகத்தின், கோட்டைபட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்ற மீனவர் இரண்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரின் சடலம் தமிழகத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாரா? அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறியப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் இந்த விடயத்தை எளிதாக விட்டு விட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.