கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பாராளுமன்றம் மற்றும் மத்திய பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் அருகே அடுத்தடுத்து இடம்பெற்ற 3 தற்கொலை குண்டுத் தாக்குதலில் தற்கொலை குண்டுதாரிகள் மூவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் 33 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக உகாண்டா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரெட் எனங்கா கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளனர்.
தலைநகர் கம்பாலாவில் மூன்று நிமிடங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து 3 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலாவது குண்டு மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வெடித்தது. ஏனைய இரண்டு குண்டுகளும் பாராளுமன்றத்திற்கு மிக அருகில் வெடிக்கச் செய்யப்பட்டன. இதனால் பாராளுமன்ற கட்டத்தின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கின. பாராளுமன்றத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தக் குண்டுத் தாக்குதலில் இறந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் அடங்குவதாக காண்டா பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பிரெட் எனங்கா தெரிவித்தார். தாக்குதலில் படுகாயமடைந்த 5 பேர் உட்பட 33 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதுகில் பை ஒன்றைத் தாங்கியவாறு வந்த ஒரு தற்கொலை குண்டுதாரி தலைமைப் பொலிஸ் நிலையத்தில் அருகே உள்ள சோதனைச் சாவடியில் முதல் குண்டை வெடிக்கச் செய்ததில் அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பாராளுமன்றக் கட்டம் அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதில் தற்கொலை குண்டுதாரிகள் இருவருடன் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டார்.
கடந்த மாதமும் ஐ.எஸ். தீவிரவாதிகள் உகாண்டா -தலைநகர் கம்பாலாவில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு அருகே தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தினர். இதில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு கம்பாலாவில் உள்ள உணவகம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு பணியாற்றிய பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூவர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் துணைக் குழுவே காரணம் என உகாண்டா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து தலைநகர் கம்பாலாவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.