உலகின் பெரும் செல்வந்த நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின்படி உலகின் முதல் பணக்கார நாடாக சீனா உள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தப் பட்டியலில் ஜேர்மனி 3-ஆவது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும் உலகின்மொத்த வருமானத்தில் 60 வீதத்துக்கும் மேற்பட்டவை உலகில் பெரும் 10 செல்வந்த நாடுகளிடம் உள்ளதாகவும் மெக்கன்சி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய 2000-ஆம் ஆண்டில் அதன் சொத்து மதிப்பு 7 இலட்சம் கோடி டொலராக இருந்தது. 2020-இல் சீனாவின் சொத்து மதிப்பு 120 இலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும்பணக்கார நாடாக மாறியுள்ளது.
இதே காலத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 இலட்சம் கோடி டொலராக உள்ளது.
இதேவேளை, கடந்த 20 ஆண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. . 2000-ஆம் ஆண்டில் 156 இலட்சம் கோடி டொலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020-இல் 514 இலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனாவே காரணம் எனவும் மெக்கன்சி குளோபல் நிறுவனம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.