சீனாவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தாய்வான் தனது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக மேம்படுத்தப்பட்ட F-16 அதி நவீன போர் விமானங்கள் தாய்வான் விமானப் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
F-16 போர் விமானங்களை விமானப் படையில் இணைக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
சியாயில் உள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென்பங்கேற்று மேம்படுத்தப்பட்ட 64 F-16 பேர் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தினார்.
தாய்வானிடம் தற்போது புனரமைக்கப்பட்டவை உட்பட மொத்தம் 141 F-16 போர் விமானங்கள் உள்ளன. எஞ்சிய அனைத்து விமானங்களும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முழுமையாக மேம்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் தாய்வானின் ஒத்துழைப்பின் வலிமையை இந்த விமானங்களை மேம்படுத்தும் திட்டம் காட்டுகிறது என தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் கூறினார்.
தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. எனினும் இதனை உறுதியாக நிராகரிக்கும் தாய்வான், தாங்கள் இறைமை கொண்ட ஒரு தனி நாடு என தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தாய்வானை அச்சுறுத்தும் வகையில் சீன விமானங்கள் அடிக்கடி தாய்வான் வான் பரப்புக்குள் நுழைந்து வெளியேறுவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் - சீனா இடையிலான பதட்ட நிலையால் சீன- அமெரிக்க உறவுகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தாய்வான் விவகாரத்தில் சீனா மேற்கொள்ளும் "ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் கடந்த சில நாட்களுக்கு முன் மெய்நிகர் வழியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
அதேவேளை,தாய்வானின் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆதரவு "நெருப்புடன் விளையாடுவது போன்றது. நெருப்புடன் விளையாடுபவர்கள் எரிக்கப்படுவார்கள்" என்று பைடனுக்கு ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.