மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்டதால் (drug overdoses)ஒரு வருட காலப்பகுதியில் மட்டும் அமெரிக்காவில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் இவ்வாறான மரணங்களில் எண்ணிக்கை முன்னொருபோதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வாறு ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்துள்ளனர்.
இந்தச் செய்தி துயரமளிப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொவிட் தொற்று நோய் நெருக்கடி இப்பிரச்சினையை மோசமடையச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்டதால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டுக்கு முன்னர் பதிவானதை விட 28.5 வீதம் அதிகரித்துள்ளதை புள்ளிவிபரங்கள் காட்டுவதாக அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்ததுள்ளது.
அமெரிக்காவில் அண்மைக் காலமாக உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய பல்வேறு மருந்துகளை மருத்துவர்களில் பரிந்துரையின்றி எளிதில் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. நோய்களுக்கான மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொண்டு மக்கள் உயிரிழப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.