ஐரோப்பாவில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை எதிர்த்துப் போராட்டங்களும் வலுவடைந்துள்ளன.
அரசின் புதிய சமூக முடக்க நிலை அறிவிப்புக்கு எதிராக நெதர்லாந்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
ஹேக்கில் நேற்று நடந்த போராட்டங்கள் பெரும் வன்முறையாக மாறின. போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசியும் பட்டாசுகளைக் கொழுத்தி எறிந்தும் தாக்குதல் நடத்தினர். சில இடங்களில் வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன. இதனையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆா்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.
இதேவேளை, கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆஸ்திரியா, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராகக் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் மிக வேகமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படாவிட்டால் அடுத்த வசந்த காலத்துக்குள் இங்கு மேலும் 5 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலேயே ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி வருகின்றன. அதேவேளை, ஒரு தரப்பினரிடம் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து