ஆப்கானிஸ்தானில் பெண்கள் தெலைக்காட்சி நாடகங்களில் நடிக்க தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன், பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட காண்பியக் காட்சி ஊடகங்களில் தோன்றும்போது முக்காடு அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
எனினும் எந்த வகையான முக்காடு பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவில்லை. தலிபான்கள் அறிவித்துள்ள சில விதிகள் தெளிவற்றதாகவும் மேலதிக விளக்கம் தேவைப்படுவதாகவும் இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ஆண்கள் உடலின் அந்தரங்க பாகங்களை வெளிப்படுத்தும் காட்சிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், மதத்தை அவமதிக்கும் அல்லது ஆப்கானியர்களை புண்படுத்தும் வகையில் அமையும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு கலாச்சார விழுமியங்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டு திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது என தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதிகாரத்துக்கு வந்த பின்னர் கட்டுப்பாடுகளை அவர்கள் கடுமையாக்கி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் நாடடை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த தலிபான்கள், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாடசாலை செல்ல கட்டுப்பாடுகளை விதித்தனர்.
1990 களில் அவர்களின் முந்தைய ஆட்சியின் போது பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தலிபான்களில் புதிய கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பு எதிர்பாராதது என ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உறுப்பினர் ஹுஜ்ஜதுல்லா முஜாதிதி தெரிவித்துள்ளார்.
சில விதிகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைக்காட்சி நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.