ஐரோப்பா முழுவதும் மீண்டும் எழுச்சியடைந்துவரும் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் முழுமையான முடக்க நிலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இன்று முதல் 3 வாரங்களுக்கு முடக்க நிலை அமுலில் இருக்கும். இக்காலப்பகுதியில் ஆஸ்திரியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், அத்தியாவசியமற்ற வணிக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனாப் பெருந் தொற்றின் நான்காவது மற்றும் ஐந்தாவது அலையை பல ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலையில் உலகில் முதல் நாடாக ஆஸ்திரியா கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அரசாங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான முடக்க நிலை ஆஸ்திரியாவில் அமுல் படுத்தப்பட்டது. நவம்பர் 15ஆம் திகதி அமுலுக்கு வந்த புதிய விதிகளின் பிரகாரம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் அல்லது கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிக் குணமடைந்தவர்கள் தவிர 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அவசிய தேவைகள் அன்றி வீடுகளைவிட்டு வெளியே வர முடியாது என உத்தரவிடப்பட்டது.
இதனை மீறுவோருக்கு 500 முதல் 1,450 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், புதிய விதிமுறைகளை மீறும் வர்த்தக நிறுவனங்களுக்கு 30,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் முழு நாட்டையும் முடக்கு அறிவிப்பு வெளியானது.
இதேவேளை, ஐரோப்பாவில் சில நாடுகளில் மீண்டும் கொவிட் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுவரும் நிலையில் இதனை எதிர்த்து பெரும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையே ஐரோப்பா முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாகி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாவிட்டால் அடுத்த வசந்த காலத்திற்குள் மேலதிகமாக 5 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகலாம் என உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா