கொரோனா தொற்று நோய் நெருக்கடி காரணமாக அவுஸ்திரேலியா விதித்திருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் அகதிகள், சா்வதேச மாணவர்கள், தொழில்வான்மையாளர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரிவினருக்கு டிசம்பர் -01 முதல் மேலும் தளர்த்தப்படுவதாக பிரதமர் ஸ்கொட் மோரிசன் இன்று அறிவித்துள்ளார்.
சா்வதேச மாணவர்கள், தொழில்வான்மையாளர்களுடன் ஜப்பான் மற்றும் தென் கொரிய குடிமக்களுக்கும் கட்டுப்பாடுகளில் தளா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு அவுஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், அவுஸ்திரேலிய அரசிடமிருந்து முன்னனுமதி பெறாமலேயே அவுஸ்திரேலியா பயணம் செய்ய முடியும்.
இவர்களுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் அந்தந்த மாநிலங்களின் சட்டங்களுக்கேற்ப அமுல்படுத்தப்படும் எனவும் பிரதமர் ஸ்கொட் மோரிசன் கூறினார்.
அரசின் இவ்வறிவிப்பைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா விசா வைத்திருக்கும் சுமார் 2 இலட்சம் பேர் டிசம்பர் முதல் அவுஸ்திரேலியாவுக்கு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட அவுஸ்திரேலியர்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் விதிவிலக்கு அனுமதி பெறாமல் வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பக்கூடிய வகையில் நவம்பர் -01 முதல் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில் இன்று மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூருடன் செய்துகொள்ளப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டினைப் போலவே, ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடனும் அவுஸ்திரேலியா ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளது.
இதன்கீழ் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரிய நாட்டவர்கள் டிசம்பர் 1 முதல், தனிமைப்படுத்தல் கட்டுப்பாடின்றி அவுஸ்திரேலியாவுக்கு பயணம்செய்யமுடியும்.
கொரோனா தொற்று நோய் நெருக்கடி காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய எல்லைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா