பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் இரு படகுகளில் ஊடுருவிய 23 இந்திய மீனவர்களையும் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் விடுவித்த நீதிமன்றம் அவர்களது படகுகளை அரச உடமையாக்கியது.
இதன் அடிப்படையில் வெளிவந்த 23 இந்திய மீனவர்களும் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் மேற்கொண்ட சமயம் மூவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 20 பேரையும் இன்று தமிழ்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
விமானச் சிட்டை எடுப்பதற்காக நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தற்போது 18 பேர் மட்டும் இன்று நள்ளிரவு 11.50ற்கு புறப்பட்டு அதிகாலை விமானத்தில் சென்னை செல்கின்றனர்.
இவ்வாறு செல்வோர் நாளை காலை அவர்களது வீடுகளிற்கு சென்றடைவர் என எதிர்பார்க்கப்படும் அதேநேரம் கொரோனாத் தொற்றிற்கு இலக்கான ஐவரும் குணமடைந்த பின்னர தாயகம் அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.