இஸ்ரேலுக்குள் வெளிநாட்டவர்கள்நுழைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் 14 நாட்களுக்கு தடை அமுலுக்கு வருகிறது.
ஓமிக்ரோன் புதிய திரிபு பரவல் அச்சத்தை அடுத்து இஸ்ரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அமைச்சரவையின் முழுமையான அங்கீகாரம் பெறப்பட்டு வெளிநாட்டவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கான தடை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரோன் திரிவு வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இதுவரை இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து தென்னாப்பிரிக்காவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் பயணக் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் கடுமையாக்கியது.
அத்துடன், வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் நாட்டுக்குள் நுழையும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து இஸ்ரேலிய பிரஜைகளுக்கும் மூன்று நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஏழு நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று 50 ஆப்பிரிக்க நாடுகளை சிவப்பு பட்டியலில் இஸ்ரேலிய அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
அந்த நாடுகளில் இருந்து திரும்பும் அனைத்து இஸ்ரேலிய பிரஜைகளும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு கொவிட் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இஸ்ரேலுக்குள் வெளிநாட்டினர் நுழைவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் வெளிநாட்டவர்கள் நுழைய இஸ்ரேலில் நேற்று முதல் 14 நாட்கள் தடை அமுலுக்கு வரவுள்ளது.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 1.3 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தொற்று நோயாளர்கள் இஸ்ரேலில் உறுதிப்படுத்தப்பட்டனர். 8,100 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்களும் இஸ்ரேலில் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.