Thursday 28th of March 2024 06:38:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
மோசடிகள் குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்களை  வெளியிட தயாராகும் துஷான் குணவர்தன!

மோசடிகள் குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட தயாராகும் துஷான் குணவர்தன!


வெள்ளைப் பூண்டு மோசடி மற்றும் காஸ் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பான மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தயாராகி வருகிறார்.

டெய்லி மிரர் மற்றும் லங்காதீப ஊடகங்கள் சனிக்கிழமை தொகுத்து வழங்கிய சமூக ஊடக நேரடி கலந்துரையாடலின்போது பல அமைச்சுக்களில் இடம்பெற்ற சட்டவிரோதச் செயற்பாடுகள் காரணமாகவே நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து தான் விலகியதாக துஷான் குணவர்தன குறிப்பிட்டார்.

பதவி விலகி வெளியே வருவதன் மூலம் அரச நிறுவனங்களில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை அம்பலப்படுத்த முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என உணர்ந்ததாக அவர் கூறினார்.

சரியான நேரத்தில் ஊழல்-மோசடிகள் குறித்த மேலும் பல தகவல்களை நான் வெளியிடுவேன். அந்த அனைத்து தகவல்களையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் சமர்ப்பிக்கவுள்ளேன் எனவும் துஷான் குணவர்தன தெரிவித்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு அமைச்சரின் அரசியல் பணிகளுக்காக பொது நிதியை விடுவிக்குமாறு அமைச்சு ஒன்று கோரியதாகவும், அதற்கு உடன்பட தான் மறுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் கொள்கையை நடைமுறைப்படுத்தவே நான் பதவிக்கு வந்தேன். எந்தவொரு அமைச்சருக்கும் தனிப்பட்ட ரீதியில் சேவகம் செய்ய நான் பதவிக்கு வரவில்லை என அவா் குறிப்பிட்டார்.

இரண்டு வெள்ளை பூண்டு கொள்கலன்கள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டமை உட்பட பல அதிா்ச்சி சம்பவங்களை துஷான் குணவர்தன வெளிப்படுத்தினார்.

இதன் பின்னணியில் தனக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து அவா் விலகினார்.

அத்துடன், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களில் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செய்யப்படும் கலவை மாற்ற மோசடி குறித்தும் அவர் அண்மையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.

எரிவாயு சிலிண்டர்களில் செய்யப்படும் கலவை மாற்ற மோசடியால் அவை வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாகவும் இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவா் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE