யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் மத்தி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 30 இற்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தால் கற்றல் நடவடிக்கையினை அவலமாகவே முன்னெடுக்கவேண்டிய இக்கட்டான நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்படட கொடிகாமம் J/327 கிராம அலுவலர் பகுதியை பிரதான வீதியுடன் இணைக்கும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.
அவர்களின் பகுதியிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் இடுப்பளவு நீர் காணப்படுவதால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் நிலையில் உடை முழுமையாக நனைந்து பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வரையில் ஈரத்துடன் இருக்கவேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
சிறார்கள் சிலரை குடும்பத்தார் ஆடையின்றி நீருக்குள்ளால் அழைத்துவந்து கரையில் ஆடை அணிவித்து பாடசாலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது.
புகையிரத நிலையத்துக்கு சமாந்தரமாக காணப்படும் கொடிகாமம் மத்தி மக்கள் பயன்படுத்தும் வீதி 500 மீற்றர் தூரத்திற்கும் அதிகமான பகுதி நீர் நிறைந்து காணப்படுகிறது.
நூறு மீற்றர் தூரம் கடக்கவேண்டிய இடத்தில் காணப்படும் நீர் நிலையினைத் தவிர்க்கவேண்டுமானால் நாகநாதன் வீதி ஊடாக 2 கிலோமீற்றர் தூரம் கடக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறித்த பகுதியில் காணப்படுகின்ற தொடருந்துப் பாதையின் பாலத்திற்கான ஆழத்தினை அதிகரித்தால் நீர் வடிந்தோடும் என்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபையினரால் தொடருந்து திணைக்களத்திற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.
மாற்றுவழியாக 9 மில்லியன் ரூபா செலவில் பாதைச் சீரமைப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்திற்கு உரிய தீர்வினைப் பெற்றுத்தரக் கூடிய அதிகாரம் மிக்கவராக வடக்கு மாகாண ஆளுநர் காணப்படுவதால் அவர் நேரில் வந்து தமது நிலை குறித்து அவதானித்து தமக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என்று கொடிகாமம் மத்தி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்