அமெரிக்காவில் இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரோன் திரிபு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடுமையான கொவிட் -19 பயண விதிகளை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.
எனினும் மற்றொரு முடக்க நிலையை அறிவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் 5 பேர், கலிபோர்னியா, மினசோட்டா, கொலராடோவில் தலா ஒருவருக்கு இதுவரை ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளின் கீழ் அமெரிக்கா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொவிட் தொற்றில்லை என்ற மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாகத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்வோர் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு எதிர்வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஜோ பைடன் தனது புதிய உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொவிட் பரிசோதனைகளும் அதிகரிக்கப்படும். வீடுகளுக்கே சென்று பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறையும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளை மட்டுமே அனுபவித்துவருவதாக அமெரிக்க பிராந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.