கொவிட் -19 இன் புதிய ஒமிக்ரோன் திரிபு குறித்து அதிகம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அதனை எதிர்கொண்டு முறியடிக்கத் தயாராக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸை எதிர்கொள்ள ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த நிலைமை வேறு. இப்போதுள்ள நிலைமை மிகவும் வித்தியாசமானது என நேற்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் புதிய திரிபு தற்போது 40 நாடுகளில் பரவியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தத் திரிவு அதி வேகமாகப் பரவக் கூடியதா? அல்லது தடுப்பூசிகளுக்கு கட்டுப்டாதா? என்பது தொடர்பில் இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒமிக்ரோன் அதி வேகமாகப் பரவக் கூடியது மற்றும் அல்லது தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்ற ஆரம்பகட்ட தகவல்களை தென்னாப்பிரிக்காவில் உள்ள சில விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். எனினும் இந்த முடிவு உறுதியானதல்ல என சுகாதார நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே கொவிட் -19 இன் புதிய ஒமிக்ரோன் திரிபு குறித்து அதிகம் அஞ்சத் தேவையில்லை. எனினும் நாம் தயாராகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
இதேவேளை, கொவிட் -19 க்கு எதிராக உலகில் தற்போது மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன. மேலும் அவற்றை இன்னும் பரவலாக விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பணிப்பாளர் மைக் ரியான் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடுப்பூசிகள் ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராகச் செயலாற்றாது என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்றும் அவர் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)