முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்த காலங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கும் முகமாக சர்வோதயா நிறுவனத்தினால் யு.எஸ்.ஏ நிறுவனத்தின் நிதி ஏற்பாட்டில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் இரு வருட காலப்பகுதியை கொண்ட அனர்த்த அபாய தணிப்பு பயிற்சிப் பட்டறையின் தொடர்ச்சியாக இரு கட்டங்களாக இன்று(07) மு.ப9.30மணிக்கு பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முதல் நாள் பயிற்சிப்பட்டறை ஆரம்பித்து வைக்கப்பட்டள்ளது.
குறித்த பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் லிசோ.கேகிதா, மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி சு.விக்கினேஸ்வரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் க.லிங்கேஸ்வரகுமார், சர்வோதயா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் எஸ.சத்தியகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனூடாக அனர்த்த காலங்களில் கிராம மட்டங்களில் பணிபுரிகின்ற வகையில் கிராம மட்ட அமைப்புக்களின்; அங்கத்தவர்களுக்கு குறித்த செயற்றிட்டத்தினூடாக அனர்த்த காலங்களில் இடைத்தங்கல் முகாம்களில் முகாமைத்துவம் சார் வழிப்படுத்தல் விடயங்கள் கோட்பாடு மற்றும் செய்முறையாக இருநாட்கள் போதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக மாவட்டத்தில் அதிகளவான அனர்த்தங்களிற்கு ஆளாகும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கள்ளப்பாடு, முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம சேவகர் பிரிவுகள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், சுதந்திரபுரம், விசுவமடு மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பேராறு, இந்துபுரம், பண்டாரவன்னியன் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக அதற்குரிய கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் இ.லிங்கேஸ்வரகுமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, முல்லைத்தீவு