இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருடன் பயணித்த இந்திய இராணுவ ஹெலிகப்டர் இன்று விபத்தில் சிக்கிய விபத்து- 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ஏனையோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக உடனடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு - நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே இந்த விபத்து இடம்பெற்றது.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்த இராணுவ ஹெலிகப்டர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.
அந்த ஹெலிகப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தததாக விபத்தின் பின்னரே தகவல் வெளியானது.
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளன.
ஹெலிகப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உடல்கள் தீயில் கருகியுள்ளதால் இறந்தவர்கள் யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.