Thursday 25th of April 2024 01:29:53 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்திய ஹெலிகப்டர் விபத்தில் இறந்தோர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!

இந்திய ஹெலிகப்டர் விபத்தில் இறந்தோர் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்!


இந்திய முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உடல்கள் மோசமாக சிதைந்துள்ளதாலும் எரிந்து கருகியுள்ளதாலும் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்கு இது ஓர் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் எந்த உடல் யாருடையது என்பதை அடையாளம் காண்பதற்குத் எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என இந்திய இராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லித்தர் ஆகியோரது உடல்கள் மட்டுமே இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்படாத சடலங்கள் டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சடலங்களை அடையாளம் காணும் நோக்குடன் உயிரிழந்தவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் டெல்லிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

அறிவியல்பூர்வமான முயற்சிகள் மட்டுமல்லாது உடல்களை அடையாளம் காண்பதற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் உதவியும் நாடப்படும். எந்த உடல் யாருடையது என்று அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது குடும்பத்திடம் இறந்தவர்களின் உடல் ஒப்படைக்கப்படும் என இந்திய இராணுவத் தலைமையகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று தமிழ்நாடு – குன்னூர், வெலிங்டன் அருகே இந்திய விமானப்படையின் எம்.ஐ.17வி-5 ஹெலிகப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகப்டரில் இருந்த இந்திய விமானப் படையை சேர்ந்த குரூப் கப்டன் வருண் சிங் என்பவர் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார். அவரும் தற்போது ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE