ஒமிக்ரோன் புதிய வைரஸ் திரிபுக்கு எதிராக பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இரண்டு தடுப்பூசிகள் குறைந்தளவு செயல்திறனையே வெளிப்படுத்துவதாக இங்கிலாந்து - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள் கூட ஒமிக்ரோன் தொற்றால் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் என நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரோனுக்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் குறைந்தளவு செயல்திறனையே வெளிப்படுத்துவதால் இது தொற்று நோய் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனர்.
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டு புதிய திரிபுக்கு எதிராக இவை எவ்வாறு செயலாற்றுகின்றன? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோனை செயலற்றதாக்குவதில் இரண்டு தடுப்பூசிகள் குறைந்தளவு செயல்திறனையே வெளிப்படுத்தியதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த ஆய்வு முடிவு ஒமிக்ரோனுக்கு எதிராக செயலாற்ற 3-ஆவது பூஸ்டர் தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதேவேளை, ஒமிக்ரோனுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் ஒமிக்ரோன் வைரஸ் அதன் பாதிப்பு குறித்த இறுதியான முடிவொன்றுக்கு வர முடியாமல் விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த திரிபுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் விஞ்ஞானிகளால் அறிவியல் ரீதியான இறுதி முடிவொன்றுக்கு இதுவரை வர முடியவில்லை.
புதிய ஒமிக்ரோன் திரிபால் தொற்று நோயாளர் தொகை அதிக வேகமாக அதிகரிக்கின்றபோதும் பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துவதாக இதுவரையான தரவுகள் கூறுகின்றன.
இதுவரை ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடையே ஒரேயொரு மரணமே பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் ஒமிக்ரோன் தொற்று நோயாளி ஒருவர் இறந்ததைத் தவிர வேறெந்த பெரியளவிலான சம்பவங்களும் இதுவரை பதிவாகவில்லை.
இந்நிலையின் ஒமிக்ரோன் திரிபு அதன் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து ஆராயப்படுகிறது. இது குறித்து உறுதியான முடிவொன்றுக்கு வர இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான மருத்துவ விஞ்ஞானி தெரேசா லாம்பே தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தடுப்பூசி கடுமையான நோய்வாய்ப்படல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனினும் ஒமிக்ரோனுக்கு எதிரான தனியானதொரு தடுப்பூசி தேவையா? என்பது குறித்து நாங்களும் ஏனைய மருத்து உற்பத்தியாளர்களும் ஆராய்ந்து வருகிறோம். தனியான ஒரு தடுப்பூசி தேவைப்பட்டால் அதனை விரைவாக உருவாக்க முடியும். அதற்கான வாய்ப்புக்கள் தற்போது உள்ளன எனவும் தெரேசா லாம்பே குறிப்பிட்டார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து