அமெரிக்காவில் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 மில்லியனை கடந்துள்ள அதேநேரம், கொரோனா மரணங்களும் 8 இலட்சத்தைக் கடந்துள்ளன.
இன்று காலை வரையான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் 51,018,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 819,315 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதிய ஓமிக்ரோன் உருத்திரிபு பரவலைத் தடுக்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், டெல்டா வைரஸ் அமெரிக்காவைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் தொற்று நோயாளர் தொகை குறைந்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக தினசரி தொற்று நோயாளர் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது. டெல்டா வைரஸே இங்கு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அமெரிக்கா முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் 20 வீதம் வரை தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், அங்கு கொவிட் -19 தொற்று இறப்பு எண்ணிக்கை 4.6% உயர்ந்துள்ளது.
அதேவேளை, ஏறக்குறைய பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்க மாநிலங்களில் ஒமிக்ரோன் திரிபு தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் தற்போது பாதிக்கப்படுவோரில் 99 வீதமானவர்கள் டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு மையத்தின் பணிப்பாளர் டாக்டர் ரோஷல் வெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அமெரிக்காவில் கொவிட் -19 தொற்று நோயாளர் தொகை 25 மில்லியனை எட்ட ஓராண்டு காலம் பிடித்தது. எனினும் 323 நாட்களில் தொற்று நோயாளர் தொகை இரட்டிப்பாக அதிகரித்து 50 மில்லியனை தற்போது கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.