இங்கிலாந்தில் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து முன்னொருபோதும் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.
நேற்று புதன்கிழமை இங்கிலாந்தில் 78,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரி 8-ஆம் திகதி நாடு முடக்க நிலையில் இருந்தபோது 68,053 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே நாட்டில் பதிவான அதிக ஒரு நாள் தொற்று நோயாளர் தொகையாக பதிவாகியிருந்த நிலையில் இந்தச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இங்கிலாந்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சில வாரங்களில் தொற்று நோயாளர் தொகை முந்தைய சாதனைகளை முறியடித்து தொடர்ந்து அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி எச்சரித்தார்.
ஆபத்தான இந்த சூழ்நிலையில் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் மக்கள் ஒன்றுகூடல்களைத் தவிர்த்து, சுகாதார வழிகாட்டுதல்களை தீவிரமாகப் பேண வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினார்.
பேராசிரியர் விட்டியுடன் இணைந்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தற்போது தகுதியுள்ள அனைவரும் விரைவாக பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது என்றார்.
சில பகுதிகளில் தொற்று நோயாளர் தொகை அண்மைய நாட்களில் தினசரி இரட்டிப்பாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளர் அனுமதியும் கிட்டத்தட்ட 10% அதிகரித்துள்ளது. இது அச்சமூட்டும் வகையில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஒமிக்ரோன் மற்றும் டெல்டா என இரண்டு ஆபத்தான திரிபுகள் தற்போது நாட்டை அச்சுறுத்தி வருவதாக பேராசிரியர் விட்டி கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து