இங்கிலாந்தில் முன்னொருபோதும் இல்லாதவாறு அதிகளவில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
நேற்று புதன்கிழமை மொத்தம் 106,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு கடந்த டிசம்பர் 15 முதல் தொற்று நோயாளர் தொகை தினசரி முந்தைய அளவுகளை முறியடித்து உயர்ந்து வருகிறது. இந்நிலையிலேயே மற்றொரு அதிகரிப்பாக நேற்று 106,122 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இங்கிலாந்தில் மொத்தம் 8,008 பேர் கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நிலைமை மோசமடைந்து வருகின்ற போதும் கிறிஸ்துமஸூக்கு முன்னதாக இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
எனினும் கிறிஸ்துமஸ்க்குப் பின்னர் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படலாம் எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று பாதிக்கப்பட்ட 106,122 பேருடன் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 16 இலட்சத்து 47 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று மேலும் 140 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் நாட்டில் கொரோனாவுக்குப் பலியானோர் தொகை 1 இலட்சத்து 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 99 இலட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15 இலட்சத்து 77 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து