கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் (Paxlovid) வாய்வழி தடுப்பு மருந்தை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் மருந்து வில்லைகளை கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 12 வயதுக்கு மேற்பட்டோர் எடுத்துக் கொண்டால் நோயின் தீவிரத்தன்மை குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடும் பாதிப்புக்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரை இறப்பில் இருந்து பாதுகாக்க பைசரின் பாக்ஸ்லோவிட் வாய்வழி தடுப்பு மருந்து 90% பயனுள்ளதாக இருப்பதாகவும் ஒமிக்ரோன் தொற்றுக்கு எதிராகவும் இந்த மருந்து சிறப்பாக செயற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில் பைசரின் இந்த வாய்வழி தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு சுமார் 120 மில்லியன் மருந்துகளை தயாரிக்க முடியும் என பைசர் தெரிவித்துள்ளது. அத்துடன், அமெரிக்காவில் இந்த தடுப்பு மருந்தை உடனடியாக விநியோகிக்கத் தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திடம் ஜனவரி மாதத்திற்குள் 265,000 கொரோனா தடுப்பு மருந்து வில்லைகளைக் கையளிக்க முடியும். அடுத்த மாதங்களில் விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும் என பைசர் உறுதியளித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் கொவிட்-19 பதில் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியண்ட்ஸ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
இதேவேளை, அமெரிக்க அரசு முன்பதிவு செய்துள்ள 10 மில்லியன் தடுப்பு மருந்து வில்லைகளை அடுத்த ஆறு மாதங்களுக்குள் பெற எதிர்பார்ப்பதாகவும் அவா் குறிப்பிட்டார்.