சவுதி அரேபியாவின் அபா விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த வந்த வெடிகுண்டு நிரப்பிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் ட்ரோன் சிதைவுகள் தாக்கியதில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
நேற்று வியாழக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் சிதைவுகளால் 12 பேர் காயமடைந்ததாக சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள் உறுதி செய்துள்ளன.
அபா விமான நிலையத்தில் உள்ள இராணுவ நிலையை காசெப் 2 (Qasef 2)ட்ரோன் மூலம் தாங்கள் தாக்கியதாக ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரியா உரிமை கோரினார். இதேவேளை, வெடிபொருட்கள் நிரப்பிய ட்ரோனை தாக்கி அழித்ததை தொடர்ந்து அபா விமான நிலையத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என சவுதி தலைமையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.
தாக்கி அழிக்கப்பட்ட ட்ரோன் சிதைவுகள் விமான நிலைய வளாகத்திற்குள் விழுந்ததில் சிறியளவான சேதங்கள் ஏற்பட்டன. ட்ரோன் சிதைவுகள் தாக்கியதில் இரண்டு சவுதி பிரஜைகள் மற்றும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பிலிப்பைன்ஸ் பிரஜைகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன.
இதேவேளை, இந்த ட்ரோன் தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கர்கள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அக்கறை கொண்டுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.
யேமனில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த உதவும் வகையில் சவுதி அரேபியா உள்ளிட்ட கூட்டணிப் படைகள் யேமனுக்கு இராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருகிறன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபியாவின் எல்லை மாகாணங்கள் மீது அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 17-ஆம் திகதி அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.