உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த தனது படைகள் பயிற்சிகளை முடித்து தங்களது வழமையான தளங்களுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளபோதும், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பங்கள் இன்னும் மிக அதிகமாகவே உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு போர் இடம்பெற்றால் அதற்கு மிகப் பெரும் விலைகளை கொடுக்க வேண்டியேற்படும் எனவும் அவா் எச்சரித்தார்.
தொலைக்காட்சி ஒன்றில் நேற்று கருத்து வெளியிட்ட பைடன், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதற்கு தீர்க்கமாக பதிலளிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கூறினார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தற்போது சுமார் 150,000 துருப்புக்களை குவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் குறிப்பிட்டார்.
எல்லையில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு படைகளை வாபஸ் பெற்றுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் இது உறுதிசெய்யப்படவில்லை. உண்மையில், ரஷ்யப் படைகள் இன்னும் அச்சுறுத்தும் நிலையில் இருப்பதாக எங்கள் புலனாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் என அவா் தெரிவித்தார்.
தனது பாதுகாப்பு தொடர்பான மொஸ்கோவின் கவலைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறிய சில மணி நேரங்களுக்கு பிறகு பைடனின் இவ்வாறான கருத்து வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு முயற்சி குறித்த குற்றச்சாட்டுக்களை புடின் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, ஐரோப்பாவில் இன்னொரு போரை ரஷ்யா விரும்பவில்லை என்றும் கூறினார். எனினும் நவம்பர் முதல் பதற்றம் அதிகரித்து வருகிறது.
முன்னாள் சோவியத் குடியரசாகிய உக்ரைனுடன் ரஷ்யா ஆழமான கலாசார மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. மேற்கத்திய நேட்டோ இராணுவக் கூட்டணியில் உக்ரைன் சேரப்போவதில்லை என்ற உத்தரவாதத்தை பெற புடின் விரும்புகிறார். நேட்டோவில் உக்ரைன் இணைவது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் கருதுகிறார்.
இந்நிலையில் நேட்டோவில் உக்ரைன் இணையாது என்ற சட்டபூர்வமான உத்தரவாதத்தை அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் புடின் கோருகிறார். எனினும் இத்தகைய உத்தரவாதத்தை வழங்க அமெரிக்காவும் நேட்டோவும் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.