உக்ரைனின் கிழக்கில் ரஷ்ய ஆதரவு கிளாச்சியாளர்கள் வசமுள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்து, அங்கு தனது படைகளை ரஷ்யா அனுப்பி வைத்துள்ள நிலையில் ரஷ்யா மீதான முதல்கட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.
நேற்றிரவு தொலைக்காட்சியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா மீதான தடைகளை அறிவித்தார். இது முதல் கட்ட தடைகள் என அறிவித்த பைடன், உக்ரைன் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்தால் இந்தத் தடைகள் மேலும் வலுவடையும் என கூறினார்.
நேற்று வெளியிடப்பட்ட அமெரிக்க நிதித் தடைகள் ரஷ்யா சர்வதேச நிதியுதவியைப் பெறுவதற்கான வழிகளை மூடிவிட்டன. இதன்மூலம் ரஷ்யா மேற்கிலிருந்து பணத்தை திரட்ட முடியாது அல்லது அதன் நிதி அமைப்புகளில் கடன் வர்த்தகம் செய்ய முடியாது.
அத்துடன், 80 பில்லியன் சொத்துக்களை வைத்திருக்கும் இரண்டு பெரிய ரஷ்ய வங்கிகளான வி.இ.பி (VEB) மற்றும் ரஷ்யாவின் இராணுவ வங்கி ஆகிய நிதி நிறுவனங்களின் மீது தடை விதித்து பைடன் உத்தரவிட்டார்.
உக்ரைனுக்கு அதிக அளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் எனவும் தனது உரையில் பைடன் குறிப்பிட்டார்.
விளாடிமிர் புதின் பல பிரதேசங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கான ஒரு காரணத்தை உருவாக்குகிறார், என் பார்வையில் அவர் தாக்குதல் நடத்த மேலும் ஒரு காரணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் என பைடன் கூறினார்.
தனது அண்டை நாடுகளுக்கு சொந்தமான பிரதேசத்தில் புதிய நாடுகளை அறிவிக்கும் உரிமையை யார் புடினுக்கு வழங்கியது? எனவும் அவா் கேள்வி எழுப்பினார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் மேலும் விரைவான மற்றும் கடுமையான தடைகளை விதிப்போம். அதற்கான திட்டங்களை தயாரித்துள்ளோம் எனவும் பைடன் குறிப்பிட்டார்.