பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களைச் சோ்ந்த விமானங்கள் தனது விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும் அதன் வான்வெளியைக் கடப்பதற்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா தடை விதித்துள்ளது.
ரஷ்ய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது.
ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோப்ளோட் (Aeroflot) இங்கிலாந்தில் தரையிறங்க இங்கிலாந்து தடை விதிப்பதாக அறிவித்ததை அடுத்து பதிலடியாக ரஷ்யா பிரிட்டிஷ் ஏா்லைன்ஸ் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை அடுத்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை பிரிட்டன் விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே விமானத் தடையும் அறிவிக்கப்பட்டது.
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியதைத் தொடர்ந்து வியாழன் அன்று உக்ரைனின் வான்வெளி மூடப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பொதுவாக லண்டன் மற்றும் மொஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்குகிறமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து