உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பொதுச் சபை அவசர கால சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.'
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.நா. பொதுச் சபை அவசர கால சிறப்பு பொதுக்கூட்டம் இன்று கூட்டப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பில் ஐ.நா. பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. இன்று திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில், பொதுச் சபை 193 உறுப்பு நாடுகளும் உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து தங்கள் கருத்துகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த கூட்டத்திற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது. ஆனால், குறிப்பிட்ட ஐ.நா தீர்மானத்தின் கீழ் அந்த நடவடிக்கையை வீட்டோ செய்ய முடியவில்லை.
“அமைதிக்கான ஐக்கியம்” என்று அழைக்கப்படும் இந்தத் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபை ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகியவற்றிடையே ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால் பொதுச் சபையின் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்த வழிவகை செய்கிறது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்தது. இந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி வீட்டோ செய்ய முடியாது என்பதால், 11 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று இரவு ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.