முல்லைத்தீவு மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று(03) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00மணிக்கு இடம்பெற்றது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாயத்துறை சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆரயப்பட்டுள்ளது.
இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்,
விவசாயிகள் பலத்த சவால்களின் மத்தியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அரசாங்கத்தின் பசுமையான நாடு எண்ணக்கருவிற்கமைய எமது மாவட்டத்திலும் நஞ்சற்ற ஆரோக்கியமான உணவு உற்பத்தியினை பெருக்க வேண்டும். இதற்காக சேதனப்பசளை உற்பத்தியை அதிகரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தி விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி வங்கிகளின் கடன் வசதிகளின் தன்மைகள் தொடர்பாக துறை சார்ந்தவர்களுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சேதனப்பசளைப் பாவனை தொடர்பாகவும், விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள விதை மற்றும் நடுகைப்பொருட்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சிறுபோக பசளை பாவனை தொடர்பாக விவசாயிகளுக்கு கமநல அபிவிருத்தி பிரிவுகள் ரீதியாக விழிப்புணர்வு செயற்றிட்டங்களை எதிர்வரும் 8ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரை நடாத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது மாவட்டத்தில் பிரதி மாகாண விவசாயத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாயம் சார்முன்னேற்ற அறிக்கை பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் ஜாமினி சுசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.முபாரக், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஜி வில்வராஜா, பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், நீர்பாபாசன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு