ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மீள நிகழாமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பல்வேறு நாடுகள் தங்கள் கரிசனைகளை வெளியிட்டன.
இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை உத்தியோகபூர்வமாக நேற்று இரவு வெளியிட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அது தொடர்பில் பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் கரிசனைகளை வெளிப்படுத்தினர். ஜேர்மனி
சர்வதேச தரங்களுக்கு ஏற்ப பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும என ஜேர்மன் பிரதிநிதி இதன்போது வலியுறுத்தினார். சிவில் சமூகத்தை சோ்ந்தோர் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செயற்பட அனுமதிக்க விரிவான சீர்திருத்தங்கள் அவசரமாக தேவை எனவும் ஜேர்மனி கூறியது.
சவூதி அரேபியா
இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறைகளுடன் அதன் ஒத்துழைப்புக்காக இலங்கையை பாராட்டுவதாக சவுதி -அரேபியா தெரிவித்தது.
இங்கிலாந்து
காணாமல் போனோர் அலுவலகத்தின் பொறிமுறைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கரிசனை கொண்டிருப்பதாக இங்கிலாந்து கூறியது. அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் திருப்திகரமானதல்ல என இங்கிலாந்து தெரிவித்தது.
நோர்வே
தன்னிச்சையான கைதுகள், சிவில் சமூகத்தினர் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு நோர்வே இலங்கைக்கு அழைப்பு விடுத்தது.
நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது குறித்து நாங்கள் கவலை அடைகிறது என நோர்வே பிரதிநிதி கூறினார்.
நெதர்லாந்து
ஜனநாயக அமைப்புகள் குறைமதிப்புக்குட்படுத்தப்படுதல், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் முன்னேற்றம் இன்மை குறித்து நெதர்லாந்து தங்கள் கவலையை வெளிப்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாத தடைச் சட்டத்தில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப திருத்தங்களை கொண்டு வருமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களை விடுதலை செய்ய ஊக்குவிக்கிறோம்.
சிவில் சமூக அமைப்புகள் மீதான தொடர் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களை நாங்கள் கண்டிக்கிறோம் என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி தெரிவித்தார்.
மொண்டினீக்ரோ
இலங்கையின் உத்தேச புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் நீதித்துறை மற்றும் பிற முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்திற்கும் அரசியல் அதிகார பகிர்வுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என மொண்டினீக்ரோ பிரதிநிதி கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து, ஜெர்மனி, நோர்வே, இலங்கை, உலகம்