உக்ரேனிய துறைமுக நகரமான மேரியோபோல் நகரை முற்றுகையிட்டு ரஷ்ய துருப்புக்கள் உக்கிர தாக்குதல் நடத்தி வருவதாக அந்த நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தையை இந்த வார இறுதி நாட்களில் நடத்த ஒப்புக்கொண்டுள்ள போதும் உக்ரைன் மீதான உக்கிர தாக்குதல்களை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகளின் தீவிர தாக்குதல்களுக்கு மத்தியில் மேரியோபோல் நகரவாசிகள் வெளியேற கால அவகாசம் வேண்டும் நகர மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இந்தப் பகுதியில் இருந்து யாரும் வெளியேற கூடாது என ரஷ்ய படையினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களை வெளியேற அனுமதிக்காது ரஷ்யா இரக்கமற்ற தாக்குதல் நடத்தி வருவதாக மேரியோபோல் நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ கூறியுள்ளார்.
மேரியோபோல் துறைமுக நகரம், கடந்த வியாழன் முதல் ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு மனித பேரழிவு ஏற்படக்கூடும் என அந்நகர மேயர் குறிப்பிட்டிருந்தார். தற்போது மேரியோபோல் நகரத்தில் சுமார் 450,000 மக்கள் வசிக்கின்றனர்.
தற்போது தொடரும் கடுமையான பீரங்கி தாக்குதலுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் அந்தப் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான மேரியோபோல் துறைமுக நகரத்தை ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் பட்சத்தில் கிரிமியாவையும், ரஷ்ய ஆதரவுடைய பகுதிகளான லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் ஆகியவற்றையும் இணைப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாக இது மாற்றப்படும் எனத் தெரியவருகிறது.