உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து உக்ரைனுடன் இணைந்து போராட 3,000 அமெரிக்கர்கள் முன்வந்துள்ளதாக வொஷிங்டனில் உள்ள உள்ள உக்ரைன் தூதரகத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுடன் இணையுமாறு வெளிநாட்டு தன்னார்வலர்களுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்துள்ள நிலையில் உக்ரைனுடன் இணைந்து போராட 3,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஊடகத்திடம் அவா் கூறியுள்ளார்.
உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அத்துடன், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாத் தடைகளையும் மேற்குலக நாடுகள் விதித்துள்ளன. எனினும் நேரடியாக இராணுவத்தை அனுப்பவில்லை.
இவ்வாறான நிலையில் ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவும் வெளிநாட்டு தன்னார்வலர்களின் சர்வதேச படையணியை உருவாக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பை ஏற்று சுமார் 16,000 வெளிநாட்டினர் உக்ரைனில் போராட உதவ முன்வந்ததாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.