ஹெய்ட்டி குடியேற்றவாசிகள் 356 பேருடன் கடலில் தத்தளித்த மரப் படகொன்று அமெரிக்காவின் - புளோரிடா மாகாணம் கீஸில் நேற்று கரை ஒதுங்கியது.
பல வருடங்களில் அமெரிக்கக் கரையில் நடந்த மிகப்பெரிய மனித கடத்தல் முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
படகு கடலில் தத்தளித்த நிலையில் அதிலிருந்த 158 பேர் கடலில் குதித்து, கடல் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் கரையை நோக்கி நீந்த முயன்றனர். இந்நிலையில் அவர்கள் அமெரிக்கா சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையணியினரால் மீட்கப்பட்டு அமெரிக்க எல்லைக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். ஏனைய 198 பேரும் படகில் இருந்த நிலையில் அமெரிக்க கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
படகில் இருந்த புலம்பெயர் குடியேற்றவாசிகள் பலர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர் என அமெரிக்க கடலோர காவல் படை தொடர்பாளர் கூறினார்.
கரீபியன் தீவு நாடான ஹெய்ட்டியில் கடந்த ஆண்டு முதல் அரசியல், பொருளாதார ரீதியில் குழப்பம் நிலவி வருகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவினல் மொசி கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ஹெய்ட்டியில் கடந்த ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் குழப்பங்களை சந்தித்து வரும் ஹெய்ட்டியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதனால் புகலிடம் தேடி கடல் வழியாக அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.