40 -க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக தெற்கு சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தில் இன்று தரையிறங்க முற்பட்ட நிலையில் ஓடுபாதையிலிருந்து விலகி தரையில் மோதி சேதமடைந்தது.
சோமாலியா-கென்யா எல்லையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோமாலியாவின் கெடோ பிராந்தியத்தின் புராஹே இராணுவ முகாமில் இந்த விமானம் தரையிறங்க முற்பட்டபோதே ஓடு பாதையில் இருந்து விலகி நிலத்தில் மோதியது.
எனினும் இந்த விமானத்தில் இருந்த எவருக்கும் எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் கென்யாவின் தலைநகரான நைரோபியின் வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று புதன்கிழமை காலை வட-கிழக்கு கென்யாவில் உள்ள மண்டேராவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றது.
கெடோ பகுதி சோமாலிய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அல்-ஷபாப் என்ற போராளிக் குழுவினர் இப்பகுதியில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.