உக்ரைனில் வசித்துவரும் 27 இலங்கையர்கள், அந்நாட்டிலேயே தொடர்ந்தும் தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெலாரஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஒரு மாத கால கட்டணமற்ற விடுமுறை வழங்க பெலாரஸ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இவ்விடயங்களை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
"15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்தனர். மாணவர்கள் தவிர அங்கு வசித்த 66 இலங்கையர்களில் 39 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். போலந்து, ருமேனியா, ஜேர்மன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளையும் எமது தூதரகம் செய்து கொடுத்துள்ளது.
தற்போது உக்ரைனில் 27 இலங்கையர்கள்தான் இருக்கின்றனர். அவர்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது எனத் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களில் சிலர் தொழில் செய்கின்றனர். மேலும், சிலர் குடும்பமாக வாழ்கின்றனர்" - என்றார்.