இந்திய தலைநகர் டெல்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள வணிக வளாக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
நேற்று மாலை தீப்பரவல் ஆரம்பித்தது. தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீண்புப் பணிகள் இரவிரவாக இடம்பெற்று, இன்று காலையும் தொடர்கிறது.
இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், 14 பேர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது என டெல்லியின் துணை தலைமை தீயணைப்பு அதிகாரி சுனில் செளத்ரி தெரிவித்துள்ளார்.
தீயில் கருகி உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை விட தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்தவர்களும் உயிரிழந்ததுடன் , காயமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சரியான பாதுகாப்பு பொறிமுறை இல்லாததாலேயே தீவித்தில் சிக்கியவர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. கட்டத்தில் அவசர கால வெளியேற்ற பாதைகள் இருக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
தீ விபத்தை தொடர்ந்து கட்டட உரிமையாளர் உள்ளிட்ட இரண்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் பலியானவர்களுக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: இந்தியா, புது தில்லி