ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் நேற்று திங்கள்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், தலிபான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5 பேர் உட்பட 28 பேர் காயமடைந்தனர்.
நங்கர்ஹர் மாகாணத்தின் ஷிர்கர் பகுதியில் உள்ள கானிகில் மாவட்டத்தில் உள்ள சந்தையில் இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக நங்கர்ஹார் மாகாண பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஹபீஸ் அப்துல் பாசிர் ஜாபுலி தெரிவித்தார்.
இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு குழுவும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கடந்த ஆண்டு ஆக.15-இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு உருவெடுத்துள்ளது.
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா ஹசாரா சிறுபான்மையினருக்கு எதிராக ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் நாட்டில் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதியளித்தனர்.
எனினும் தலிபான்கள் ஆட்சியில் அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-திகதி காபூல் விமான நிலையத்தில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 170 பேர் பலியாகியமையும் குறிப்பிடத்தக்கது.